கண்ணை நம்பாதே
ராஜேஷ்குமார்
* Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.
Belletristik / Spannung
Beschreibung
சூளைமேடு.
கங்கையம்மன் கோயில் வீதியின் கடைசி குறுக்குத் தெரு மின்சாரத்தைத் தொலைத்துவிட்ட இருட்டில் இருக்க, வேப்ப மரத்துக்குக் கீழே இருந்த சிறிய வீட்டில் செல்போனின் ரிங்டோன் நிசப்தத்தை அறுத்துக் கொண்டு எழுந்தது.
போர்வைக்குள் சுருண்டிருந்த சாரதி சட்டென்று தூக்கம் கலைந்து போர்வைக்குள்ளிருந்து இடது கையை நீட்டி சுவரோரமாய் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தான். தூக்கம் அறுபடாத குரலில் கேட்டான்.“யாரு...?”
“சாரதி. நான்தான் அலமேலு அம்மா பேசறேன்.”
“ஓ, நீங்களா...? என்னம்மா இந்த நேரத்துல போன்...?”
“சாரதி, நீ எனக்கொரு உதவி பண்ணனும்...?”
போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான் சாரதி. “சொல்லுங்கம்மா. என்ன செய்யணும்...?”
“ஒரு மருந்து வேணும். நெஞ்சுவலிக்கான மாத்திரை. வீட்ல இருக்கும்னு நினைச்சு வாங்காமே விட்டுட்டேன். இப்போ நெஞ்சுல லேசா வலி. இப்படி லேசா வலி வந்தாலே உடனே மாத்திரையைப் போட்டுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். மாத்திரை போடலைன்னா வலி அதிகமாய்டும்ன்னும் சொன்னார். இப்ப மணி பனிரெண்டு. கோடம்பாக்கம் மெயின் ரோட்டுக்குப் போனா அங்கே தன்வந்தரி மெடிக்கல் ஷாக் விடிய விடியத் திறந்திருக்கும். நீ ஒரு நடை போய் வாங்கிட்டு வந்து குடுத்துடறியா சாரதி...?”
“என்னம்மா இப்படிக் கேக்கறீங்க...? இதோ கிளம்பிட்டேன். இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ளே அந்த மாத்திரை உங்க கையில இருக்கும். மாத்திரையோட பேர் என்ன...?”
“இபுபுரோஃபென்”
“இப்ப ஞாபகம் வருதும்மா. போன மாசம்கூட ஒரு தடவை இந்த மாத்திரையை நான் உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்.”
“அதேதான்.”
“இந்த அகால நேரத்துல உனக்குத் தொந்தரவு தர்றேன் சாரதி.”
“இதெல்லாம் ஒரு தொந்தரவே கிடையாதம்மா. இதோ நான் உடனே புறப்படறேன்.”
செல்போனை அணைத்துவிட்டு, போர்வையை உதறிக் கொண்டு எழுந்த சாரதி, லுங்கியைக் களைந்துவிட்டு வேகவேகமாய் பேண்ட்டுககும் சர்ட்டுக்கும் மாற ஆரம்பித்தான்சற்றுத் தள்ளி பாயில் படுத்துக் கொண்டிருந்த சாரதியின் அம்மா ராஜம் எழுந்து உட்கார்ந்தபடி ஈனஸ்வரத்தில் கேட்டாள்.
“எங்கடா புறப்பட்டே...?”
“அலமேலு அம்மாவுக்கு அர்ஜெண்டா ஒரு மருந்து வேணுமாம். போய் வாங்கிக் கொடுத்துட்டு வந்துடறேன்ம்மா...”
“சாரதி, நா ஒண்ணு சொன்னா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே...?”
“என்னம்மா...?”
“பகல் பூராவும் ஹோட்டலிலிருந்து சாப்பாடு எடுத்துட்டுப் போய் ‘ஆன்லைன்’ல சப்ளை பண்ணிட்ட வர்றே. படுத்து தூங்கறதுக்கு பதினோரு மணி ஆயிடுது. ஒரு ஆறுமணி நேரமாவது தூங்கி எந்திரிச்சாத்தானே உடம்பு நல்லாயிருக்கும். இப்படி அர்த்த ராத்திரியில் யாராவது போன் பண்ணிக் கூப்பிட்டா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட வேண்டியதுதானே...?”
“அப்படியெல்லாம் என்னால சொல்ல முடியாதம்மா. அந்த அலமேலு அம்மா ரொம்ப நல்லவங்க. நீ எப்படி எங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு பேசுவியோ அதே மாதிரிதான் அந்த அம்மமாவும் பேசும். அந்த அம்மாவோட வீட்டுக்காரர் போன வருஷம்தான் தவறிட்டார். குழந்தைங்க வெளிநாட்ல இருக்காங்க. மூணு வேளையும் ‘ஆன்லைன்’ சாப்பாடுதான். நான்தான் கொண்டு போய் குடுத்துட்டு இருக்கேன். இப்ப போன்ல நெஞ்சு வலிக்குது, மருந்து உடனே வேணும்னு கேக்கும்போது எப்படீம்மா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிக்க முடியும்...? போயிட்டு ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்மா.”
“சரி, சரி... போ, போ... நான் சொன்னா நீ கேட்கவா போறே.? மணி எவ்வளவு...?”
“பனிரெண்டே கால்.”
“ரெண்டு நாளா தெருவிளக்கு எரியலை. மெயின் ரோடு போகிற வரைக்கும் இருட்டாய் இருக்கும். வண்டியைப் பார்த்து ஓட்டு.
Kundenbewertungen
thriller, Julaiyil Oru Kolai, detective, suspense, crime novel, rajeshkumar